பள்ளிக் குழந்தைகளின் வருகை மிகவும் குறைந்து விட்டது. இதைத் தடுக்க என்ன செய்யலாம்

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பள்ளிக் குழந்தைகளின் வருகை மிகவும் குறைந்து விட்டது. இதைத் தடுக்க என்ன செய்யலாம் என அப்பள்ளி ஆசிரியர் மனநல ஆலோசகர் ஆர்த்தி சி. ராஜரத்தினம்  ம் ஆலோசனை கேட்க, ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு ஒழுங்காக வரும் மாணவர்கள் எல்லோருக்கும் ஸ்கூல் பேக், அடுத்த மாதம் பென்சில் பாக்ஸ், அடுத்த மாதம் பேனா என தன் செலவில் பொருட்களை வாங்கிக் கொடுக்க, இப்போது அப்பள்ளியில் எந்தக் குழந்தையும் விடுமுறை எடுப்பதில்லை. இவரது மில்லியன் ஸ்மைல்கல்வி முறை, ஏழைக் குழந்தைகளுக்கும் எட்டத் தொடங்கியிருக்கிறது.

இப்போதைய கல்வி முறை இயந்திரத்தனமாக இருப்பதாகக் கூறும் இவர், ‘மில்லியன் ஸ்மைல் என்ற புதியதொரு விளையாட்டுக் கல்விமுறையை வடிவமைத்திருக்கிறார். அதன்படிதான் இவரது ப்ளே ஸ்கூல் நடந்து வருகிறது. படிப்பில் குறைபாடு என்பது குழந்தைகளிடம் இல்லை. கல்வி முறையில்தான் இருக்கிறது என்பதுதான் இவரது கருத்து.

குழந்தைகளுக்காகத்தான் கல்வியே தவிர,
 கல்விக்காக குழந்தைகள் இல்லை என்ற நிலையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளான சுய உதவி, மொழி, உடல் மற்றும் இயக்கம், அறிவாற்றல், உணர்ச்சி, சமூகம் மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதை விளையாட்டு மூலமாக சொல்லித் தருகிறேன். இம்முறையின்கீழ் பயின்ற குழந்தைகளின் செயல்பாடுகளிலும், வளர்ச்சியிலும், கல்வியிலும் அபார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எல்லா குழந்தைகளும் சமம். அனைவருக்கும் சமவாய்ப்பு கொடுப்பதன் மூலம், அவர்களிடம் இருக்கும் திறனை வெளிப்படுத்த வைக்கலாம்" என்கிறார் அவர்.

நகரத்துப் பள்ளிகளில் விரயமாகும் கார்ட் போர்டு அட்டைகள்,
 பென்சில்கள், பேனாக்கள், வெற்று ஸ்கெட்ச் பென்சில்கள் என எவையெல்லாம் கழிவு என ஒதுக்கப்படுகிறதோ, அதையெல்லாம் தனது கற்பனைத் திறனால் பயனுள்ள பொருளாக்கி, அதன்மூலம் கிராமத்து மாணவர்களுக்கு இந்தப் புதிய கல்வி முறையை இலவசமாக அறிமுகப்படுத்தி வருகிறார். சேலம்,  திருச்சி,  சத்தியமங்கலம்,  கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 400 கிராமத்துப் பள்ளிகளில் இவரது சேவை விரிந்திருக்கிறது. படிப்பு வராது என்று நினைக்கும் குழந்தைகளிடம் இசை, நடனம், தற்காப்புக் கலை, ஓவியம் போன்றவற்றின் மூலம் பாடங்களை எளிமையாக கற்றுத் தருகிறார்.