இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் சாமானிய ஏழைக் குடும்பங்களைச்
சேர்ந்த மாணவர்களும் தங்களுக்கு இருக்கும் பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். முயன்றால் முடியும் என்று
சாதித்துக் காட்டிய மாணவர்கள் இதோ...
அன்று குழந்தைத் திருமணம் இன்று படிப்பில் முதலிடம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள
நொண்டிகோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரபா (வயது 19). இவரது தந்தைக்கு சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில். ஜெயப்பிரபா எட்டாம்
வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, தாய்மாமனுக்கு
திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,
குடிகாரக் கணவனிடம் இருந்து பிரிந்து வந்த ஜெயப்பிரபா தனித்தேர்வராக
பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி, 469 மதிப்பெண்கள் எடுத்தார்.
மதுரை மேலூர் அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் டூ தேர்வில் 1,136 மதிப்பெண்கள் எடுத்து, அவரது பள்ளியிலேயே முதல்
மாணவியாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார். எம்பிபிஎஸ் படிக்க வேண்டும்
என்பதே இவரது லட்சியம்.
பந்தல் தொழிலாளி மகள் வரலாற்றில் முதல் இடம்
சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு
அமுதுண்ணாக்குடி கிராமத்தை சேர்ந்த பந்தல் தொழிலாளி செல்வத்தின் மகளான ஆனி மஞ்சு, வரலாறு பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, இந்தப் பாடத்தில் மாநிலத்தில்
முதலிடம் பெற்றுள்ளார். செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர்,
பிளஸ் டூ தேர்வில் 1,125 மதிப்பெண்கள்
பெற்றுள்ளார். ‘பி.காம் படித்து முடித்து விட்டு, ஆடிட்டராவதே எனது லட்சியம்’ என்கிறார் ஆனி மஞ்சு.
ரத்தப் புற்றுநோயுடன் தேர்வு எழுதிய மாணவி சாதனை
ரத்தப் புற்றுநோயால் (myeloid leukemia) பாதிக்கப்பட்ட மாணவி வி. லட்சுமி ப்ரியா, பிளஸ் டூ
தேர்வில் 973 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கடந்த அக்டோபர்
மாதம் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையிலேயே
தங்கி கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையிலிருந்து தேர்வு எழுத
வந்து விட்டு, மீண்டும் மருத்துவமனைக்கு சென்று விடுவார்.
தலித் மாணவியான லட்சுமிப்ரியா, அவரது குடும்பத்தில் பத்தாம்
வகுப்பை தாண்டிப் படிக்கும் முதல் மாணவி. என்ஜினீயரிங் படிக்க ஆர்வத்துடன்
இருக்கிறார்.
மூளை செயல் குறைபாட்டிலும் மாணவரின் சாதனை
செரிப்ரல் பால்ஸி என்ற மூளைச்
செயல் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு, எழுந்து நடக்கவே
சிரமப்படும் ஆகாஷ் என்ற மாணவர் பிளஸ் டூ தேர்வில் 1,031 மதிப்பெண்கள்
எடுத்து சாதனை படைத்திருக்கிறார். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆகாஷிற்கு தலை நேரே
நிற்காது. எப்போதும் ஆடிக் கொண்டே இருக்கும். மற்றவர்கள் உதவியின்றி நடப்பதே
சிரமம். சென்னை, முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் படித்து வந்த
இவர் தினமும் அரைமணி நேரம் மட்டுமே படித்திருக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ்
பாடத்தில் 200-க்கு 189 மதிப்பெண்கள்
எடுத்திருக்கிறார்.
தண்டுவட நோயிலும் சாதனை மாணவர்
முதுகுத் தண்டுவட நோய்
பாதிப்பிற்குள்ளான முகம்மது ஆஷிக் என்ற மாணவராலும் எழுந்து நடக்க முடியாது.
எப்போதும் வீல்சேரில்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஓரிடத்திற்கு செல்ல வேண்டும்
என்றால் கூட மற்றவர்களின் உதவி இவருக்குத் தேவை. சென்னை, முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் படித்து வந்த இவர், பிளஸ்
டூ தேர்வில் 1,124 மதிப்பெண்களைக் குவித்து சாதனை
படைத்திருக்கிறார். இதுமட்டுமின்றி ஐஐடியில் சேர்ந்து படிப்பதற்கான முதல் கட்ட
நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். விண்வெளி தொழில்நுட்ப
படிப்புகளைப் படிக்க வேண்டும் என்பதில் ஆஷிக் ஆர்வமாக இருக்கிறார். நாசா
மையத்திற்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பது அவரது கனவு.
அன்று குழந்தைத் தொழிலாளி இன்று பள்ளி முதல் மாணவர்
சிவகாசியிலுள்ள தீப்பெட்டித்
தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளியாக இருந்த மாரீஸ்வரன், கடந்த 2003-ல் மீட்கப்பட்டு பள்ளியில்
சேர்க்கப்பட்டார். சிவகாசியில் உள்ள இந்து தேவமார் உயர்நிலைப்பள்ளியில் பயோமேத்ஸ்
படித்த அவர், பிளஸ் டூ தேர்வில் 1,097 மதிப்பெண்கள்
எடுத்து, அப்பள்ளியிலேயே முதலாவது மாணவராக தேர்ச்சி
பெற்றுள்ளார். இவரது குடும்பத்தில் யாரும் பள்ளிப் படிப்பைத் தாண்டியதில்லை.
சிவில் என்ஜினீயரிங் படிக்க விரும்புகிறார் மாரீஸ்வரன்.
தனித்தேர்வராக சாதனை
கண் பார்வைக் குறைபாடுள்ள
காரைக்கால் மாணவி டயானா பெரோரா, பிளஸ் 2 பொதுத் தேர்வை, பள்ளியில் சேர முடியாமல் தனித்
தேர்வராகத் தேர்வு எழுதி, 1,159 மதிப்பெண்கள் பெற்று சாதனை
படைத்துள்ளார். பிறவியிலேயே கண் பார்வைக் குறைபாடு (மேக்குலர் டி ஜெனரேஷன்) உள்ள
இவருக்கு, பார்வைக் குறைபாடு மேலும் அதிகரித்ததால், பிளஸ் 2 வகுப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
மனம் தளராத மாணவி டயானா, வீட்டிலிருந்தபடியே படிப்பைத் தொடர்ந்தார். தனித் தேர்வராக ஸ்கிரைப் உதவியோடு, பிளஸ் 2 தேர்வு எழுதினார். மேலும் படித்து கல்லூரி விரிவுரையாளராக வேண்டும் என்பது டயானாவின் ஆசை.
விலங்கியலில் முதலிடம் பிடித்த மாணவி
சிவகாசி இந்து நாடார்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. தனலட்சுமி, விலங்கியல் பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரது தந்தை,
கோழி இறைச்சிக் கடைத் தொழிலாளி. பிளஸ் டூ தேர்வில் இவரது மொத்த
மதிப்பெண்கள் 1,128. நர்சிங் படிக்க வேண்டும் என்பது இவரது
ஆசை.
தரத்தில் குறையாத தங்கம்
பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளி
மாணவி பி. அக்ஷயா, சென்னையிலுள்ள பார்வையற்ற, காது
கேளாதோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளி மாணவியான இவர், பிளஸ் டூ தேர்வில் 1,123 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக வயலின் கற்று வரும் இவரது எதிர்கால லட்சியம், இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பதுதான்.
வரலாறு படைத்த மாணவி!
கண்பார்வை இல்லா மாற்றுத் திறனாளி
மாணவி கலைமணி, வரலாறு பாடத்தில் 200-க்கு 200
மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை
படைத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1148. பெரம்பலூர்
துரைமங்கலம் அன்னை ஈவா மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த இம்மாணவியின் சொந்த
ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள குக்கிராமம்.
ஆதரவற்றோர் இல்ல மாணவியின் சாதனை
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி நடத்தப்பட்ட ஆதரவற்றோர்
இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட ஐந்து மாணவிகளில் ஜி. முரியலும் ஒருவர்.
வில்லிவாக்கத்திலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முரியல், பிளஸ் டூ தேர்வில் 1,047 மதிப்பெண்களை
எடுத்திருக்கிறார். “பி.டெக். இன்பர்மேஷன் டெக்னாலஜி படிக்க
விரும்புகிறேன். நன்றாகப் படித்து, நன்றாக சம்பாதித்து,
என் போன்றவர்களுக்கு உதவவேண்டும்” என்கிறார்
ஜி. முரியல்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவரின் சாதனை
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவரின் சாதனை
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்திலுள்ள கீழஅய்யன் தெருவைச் சேர்ந்தவர் ராமகோபாலன். இவர் பிறவியிலேயே
கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி. கும்பகோணம் சிறு மலர் மேல்நிலைப்பள்ளியில்
படித்து வந்த இவர், பிளஸ் டூ தேர்வில் 1,121 மதிப்பெண்கள்
எடுத்து பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். பி.காம். படித்துவிட்டு
வங்கி அதிகாரியாக வேண்டும் என்கிறார் ராமகோபாலன்.
பழங்குடி இன மாணவி சாதனை!
கோவை மாட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ள சின்னஜம்புகண்டி கிராமத்தைச்
சேர்ந்த பழங்குடின மாணவி கோபிகா, பிளஸ் டூ தேர்வில் 1,025
மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் பழங்குடி இன மாணவிகளில் அதிக
மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். சின்னதடாகத்தில் உள்ள அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.10-ஆம் வகுப்பில் 500க்கு 467 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியிலேயேமுதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவர். இவரது பெற்றோர் செங்கல்
சூளையில் வேலை செய்கிறார்கள். எம்பிபிஎஸ் படித்து டாக்டராக வேண்டும் என்பதுதான்
கோபிகாவின் கனவு.

